Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Sunday, 21 October 2012

குட்டி ரேவதி.





ஆண்மை இல்லை

அன்று மழையோ மழை
நதியின் மீதெல்லாம் மழைக்குஞ்சுகள்
அடிவயிற்றின் பயிர்மேடு
பரவசத்தில் சிலிர்த்து எழ
ரம்மியமான மந்தகாசப் புன்னகையை
உடலெங்கும் நழுவவிட்டபடி
மழை தரையிறங்கியது
நனைந்து உடலொட்டிய பாவாடையை
உயர்த்தி நின்றது காடு
ஓய்ந்த மழையை
அம்மாவின் சொல் மீறித்
திம்றிப்பறந்த பறவை சொன்னது
நினைவுகளின் தடயங்களை
மழையால் அழிக்க முடிவதில்லை
பகம் முழுதும், பின்னும்
அதன் பாடல் ஓயவேயில்லை
மகரந்தச் சேர்க்கைக்குப் பின் தளும்பும் மலர்
சோர்வுடன்

பூமியில் எங்குமே ஆண்மையில்லை.




நிர்வாணம்

உனக்கும் எனக்கும் அவளுக்கும்
நிர்வாணம் தான் பளப்பளப்பான ஆயுதம்,
குருதியின் வியர்வையில் நனையும்போதெல்லாம்
ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது
மரங்கள் நிர்வாணத்தை யடையும்போதுதான்
இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின
சீனப் போர்வீரன் சொல்லுவான்;
‘உறையிலிருந்து ஒரு போது
வாளை வெளியே இழுக்காதே
அவசியமின்றி’
நிர்வாணம் வளர வளரத்
தீயின் கொழுந்தைப் போல்.
நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று
அது உன்னை அலைக்கழிக்கும்
உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி
வாளை ஒருபோதும்
வெளியே இழுக்காதே அவசியமின்றி
அது துருப்பிடித்துச் சல்லடையானாலும்.
ஆனால் உன்னோடே
எப்போதும் வரித்துக்கொள் அதை.



Saturday, 20 October 2012

பாதசாரி


      




மீனுக்குள் கடல்

என் மனக் குரங்குக்கு
உடைகள் தைத்தே கை சலித்தோய்ந்தது
என் யாக்கையின் காலம்

நேற்றிரவு வரை
மடங்காக்கத்தி
குரங்கின் கையில்
ஆப்பிள் நறுக்க என்றோ ஒரு
ஆதாம் கொடுத்தது

மீனுக்குள் கடலில் அலை ஓய்ந்த மோன இரவு

ஏதோ ஒரு விதமாய் ஒரு அசதியில்
கத்தி கைநழுவ குரங்கது
மெய் புதைந்து தூங்குகிறது

ஒரு விழிப்பின்  தருணம் திடுமென
குரங்கின் கனவில் புகுந்துவிட நான்

கண்டேன் ஒருத்தியை
திரை இன்றி
இலை தழை கூட மேலின்றி நிறை
நிர்வாணத்தில் ஒளிரக்கண்டேன்
அவளே என் அம்மாவும் அவளே என் 
தங்கையும் அவளே என் மனைவியும் அவளே
என் குழந்தையும் அவளே.....





  பெயர்

கடவுள் பெயரோ இயற்கை பெயரோ
சூரியன் பெயரோ சந்திரன் பெயரோ
சனியின் பெயரோ மலையின் பெயரோ
மரத்தின் பெயரோ தலைவர் பெயரோ
தாத்தாவின் பெயரோ ராக்கெட்டின் பெயரோ
செல்லப் பிராணியின் பெயரோ
சர்க்கஸ் கோமாளியின் பெயரோ
ஆணின் பெயரோ பெண்ணின் பெயரோ
போல் ஏதுமில்லை
என்னை நானே கூப்பிட்டுக்கொள்ளும் ஒரு பெயர்
ரகசியமில்லை அது-


ஒரு பிச்சைக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு விபச்சாரி என்னைக் கூப்பிடும்போது
ஒரு பைத்தியக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு குஷ்ட ரோகி என்னைக் கூப்பிடும்போது
ஒரு அனாதை என்னைக் கூப்பிடும் போது
என்னை நான் கூப்பிடும்போது…..




Friday, 19 October 2012

கு.உமா தேவி






கடவுளின் கன்னியாஸ்திரி

தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன்செதில்களெனத் தரையெங்கும் வெண்துகள்
மிதந்துகொண்டிருந்தன

புற்றின் மேற்புறம் நீண்டுகிடக்கும்
வாய் மூடிய பாம்புகளைச் சிதைத்தெறியக்
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று

வலிகளை வரித்துச்சொல்லி அழத் தெரியாக்
கண்ணாடித் தேவதையின் உறைந்த பாதரசம்
வெற்றுத்தாளென
வெளியெங்கும் விறைத்து நிற்க
வாழ்தலில் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்துப் பிதுங்கிப்
பீய்ச்சியடித்த மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பாவக்கோடையைக் கடந்து கொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.



உறங்க முயன்றல்லாடுமோர் அடரிரவு



இடைவெளிகளற்றுப் பருத்துக் கனக்கிறது பருவம்
கூடவே உயிருறைய
நுண்வலியும் அப்பிச்செல்கிறது

சிறுகாற்றுக்கு அல்லாடும் பசுந்தழைகளாய்
மெல்லுரையாடலிலும் அதுவற்ற நிலையிலும்
முகத்தெளிவானது அறுபட

காலோய்ந்துத் திரும்பும்
பின்மாலைப் பொழுதில்
தாமத்தத்திற்கான காரணம் கேட்கும்
காப்பாளரின் கனிந்த பார்வைக்கு
ஏதேனும் சாக்கு சொல்லி

உள்துடிப்பில் உயிர் பொறி பறக்க
ஆடைநெகிழ்ந்தோடும் குளியறையுள்
தீய்ந்து கனக்க

சிறுநாசியில் மெல்ல நுழையும்
காமவாடை பழகாத அறையை
யாரோ தட்டிச்சென்றார்போல் தோன்றியது.

ஜெ.பிரான்சிஸ் கிருபா.






கடவுள் – கடல் – பரிசு

தனக்கென்று முடைந்திருந்த சின்னஞ்சிறு மரப்படகை
எனக்கென்று பரிசாகக் கொடுத்தார் கடவுள்.
உன் பாதைகளை வரைந்துவிட்டோம்
நீ பயணப்படலாம்.
வன்மம் மின்னும் உப்பு விழியுருட்டி கடல்
தன் பிரமாண்டத்தை உருவி பரிகாசமாகச் சிரித்தது.
நான் மிரண்டு என்னுடல் பயத்தில் நடுங்குவதைக் கண்டு
கடல்மேல் திரும்பி பரிகசிக்கும் பற்களைப்
பிடுங்கி எறிந்தார்

‘அவை இறுகிய கரும்பாறைகளாகக் கடவது’ என
எழுந்தது ஒரு கட்டளைக்குரல்.
அப்படியே ஆகிற்று.
திடுக்கிட்ட கடவுள் முகத்தைக் கடுமையாகத் திருப்பி
என்னிடம் கேட்டார் ‘ யார் நீ’
கண்களால் அவர் பார்வையை அதட்டியபடி
பணிவாகச் சொன்னேன்
இந்தச் சின்னஞ்சிறு மரப்படகுக்குச் சொந்தக்காரன்.



2 வானத்தைத் தோற்றவன்


பறவையொன்றிடம் நான் இன்று
பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு
வரவில்லை நிலவு.
நூல் பிறையளவு கொடையுமில்லை
எட்டிக்கூடப் பார்க்கவில்லை
யாதொரு நட்சத்திரமும்.
இப்படி பாழடைந்த வானம்
பார்த்ததேயில்லை இதற்கு முன்.
அவமானம் மிகுந்த இரவு
இதுவே கடைசியாக இருக்கட்டும்
சூதாடக்கூடாது இனி
வானத்தைப் பூமியில் வைத்து.


3

தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்னெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்

உன் ஈரக்கூந்தலை
கடலாகச் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்

உயரத்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி
நீரூற்று தேடி கிணறுகள் தோண்டினால்
பீறீட்டடிக்கிறது ரத்தம்

கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.