Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 15 October 2012

முகநூல் கவிஞர்களின் சுயரூபம்.




வாசகக் கண்மணிகளே.... வந்த சில நாட்களாய் நான் எழுதியது முகநூல் கவிஞர்களின் கவிதைகளுக்கு நான்கு கவிதைகளுக்கு விமர்சனம். அடியேன் செய்தது அவ்வளவுதான். தனிப்பட்ட முறையில் நான் வேறெதுவும் செய்யவில்லை. ஆனால் முகநூல் கவிஞரய்யாக்கள் எனக்குச் செய்தவைகள் இவைகள்.

1 வா. மணிகண்டன் கொசு என்றார்,

2 ஆத்மார்த்தி நான் தவறாக கவிதைகளைப் பார்க்கிறேன் என்றார். பதிலுக்கு இன்னும் விளக்கம் சொல்லவில்லை. அது தண்ணீருக்குள் விட்ட குசுவாகவே இருக்கிறது.

3 நிலா ரசிகரய்யாவை ஆளையே காணவில்லை

4 அய்யப்ப மாதவன் பெட்டைப் பயலே என்றார். எனது படுக்கயறைக்குள் நோட்டமும் விட்டார்.

5 வேல்கண்ணன் பிணி என்றார்.

இவர்கள் அனைவருக்கும் எனது விமர்சனக் கனிவான வணக்கம்.

என்ன கொடுமை அய்யா இது... உங்கள் கவிதைகளை விமர்சனம் செய்தால் இதுதான் பதில் விமர்சனமா....இது போதாதென்று அய்யா சிபிச்செல்வன் ஈமு கோழி, குதிரை என்று ஏதோ உளறியதோடு தீர்த்தமுனியை இந்தா நெருங்கிவிட்டேன் அந்தா நெருங்கிவிட்டேன் என்றார். அய்யா அவருக்கு பதில் வைத்தும் அது காணாமல் போய்விட்டது. இதுவெல்லாம் போதாதென்று ஏதோ வயிற்றுக்கடுப்பு வந்தவன் வெளியூர் சென்று கழிவறை தேடி அலைந்த கதையாய் எனக்கு கவிதை வந்தது என்று குமுறிக்கொண்டிருக்கிறார். நான் இவர்களை பொருட்படுத்தினேன். நாளையக் கவிக் கண்மணிகள் என எண்ணி எழுதினேன். ஆனால் அது காமெடியாகிவிட்டது. நான் யாரிடம் உரையாடியிருக்கிறேன் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது செல்லங்களே...

வாசகக்கண்மணிகளே...இதுவரை எனது முக நூல்கணக்கு இரண்டு முறை ஹேக் செய்யப்பட்டுவிட்டது. ஹேக் செய்வது எப்படி என எனது விமர்சனத்துக்கு பதில் சொல்லாது கம்மென்றிருக்கும் தங்கங்கள், செல்லங்கள் வைரக்குட்டிகள் அறிவார்கள்.


நான் கவிஞராக்கும் என்று கொந்தளித்துக் குமுறும் இவர்களின் அன்பு மனம் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன். அதிலும் இந்த அய்யப்ப மாதவனய்யா அவர்கள் பெட்டைப்பயல், செறுப்பென்று உளறியதோடு இப்பொழுது நான் புணர்ந்த பின் பெண்ணென்பவள் யார் என்கிற உலகத்தத்துவத்தை உச்சுக்கொட்டிச்  சொல்கிறார். பார்க்க பார்க்க பரிதாபமாக இருக்கிறது கண்மணிகளே. அவர் பக்கங்களெங்கும் கவிஞர்கள்தான் நாளைய உலகை ஆளவேண்டும் எழுதும் கரங்களே எனப் பாடலைப் பாடி மற்ற அனைவரையும் தண்டங்கருமாந்திரங்கள், நாசமாப் போய்ச் சாகட்டும் என்கிறார். அவரது அன்புக்கவியுள்ளம் கண்டு நொந்தேன் நான். நான்கு விமர்சனங்களிலேயே முகநூல் கவிஞர்களின் கொந்தளிப்புகளை சரியாக சுட்டியுள்ளேன் என நினைக்கிறேன். கீழே வாசக்கண்மணிகள் காணுவது அய்யாச் சிபிச்செல்வன் கவிதை எழுதும் தருணமாய் எழுதியதற்கான விமர்சனம்.


கவிதை எழுதுவதும் ஈமுக் கோழி வளர்ப்பும்

கவிதை எழுதும் தருணமாக அய்யா சிபிச்செல்வன் உளறியது எனக்கு ஏகக் கொண்டாட்டத்தை இனிப்புடன் வழங்கிவிட்டது. திரைப்பட பில்டப்புகளை நினைவில் கொண்டுவந்தது. அந்த பில்டப்புகளையே நான் காமெடி நடிகர்களுக்கு இசையென வழங்கும் டொய்ங் என்ற சப்தமாக மாற்றியிருக்கிறேன்.

கவிதையியல் கவிதை எழுதும் தருணம் என்ற தலைப்பில் கவிஞரென்று சொல்லிக்கொள்ளும் கவிஞரய்யா சிபிச்செல்வன் தனக்கு கவிதை வந்த அனுபவத்தை அருமையாக எழுதியிருந்தார். படித்தேன். அவரின் உரையாடல் முழுக்க தான் கவிதைதான் எழுதப்போவதாக நம்பிக்கொண்டு வீட்டுக்கு வேகமெடுத்து ஓடியுள்ளார். நல்ல வேளை தடுக்கிவிழவில்லை. கொதிநிலையில் வெடிக்க தயாராக இருக்கும் பிரஷர் குக்கர் போல அவரது உடல். மனம் ஏனைய உடல் உறுப்புகள் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது.

இது போன்ற விஸ்தீரணங்களை கவிஞரய்யா கவிதை எழுதும் தருணத்தில் அடைந்திருக்கிறார். இதை வியாக்கியானமாக அவரை எழுதத் தூண்டியது எது என்பதை ஒரு சிற்றறிவுக்கெட்டிய உளவியல் சார்ந்த கேள்வி பதில்களாக முன்வைத்துப் பார்க்கலாம்.


1 ஒரு கவிதையை எழுத இவ்வளவு அவஸ்தையா?

                          ஆம் கவிப்பொழுது சும்மாயில்லை. ஆண்டு, அகன்று செரித்து உள் நுழைந்து குமுறிவரும் கொந்தளித்து ஒருக்களித்து புரண்டு படுத்து, கோட்டுவாய் கோட்டை உடைக்கும் ஒரு பயங்கர ஆற்றல். அது எல்லோருக்கும் வந்துவிடாது, இத்தகு அவஸ்தைகளோடு எழுதினால்தான் அது கவிதை. அதுவும் அது கவிதையாகத்தான் இருக்கும் என முடிவு கட்டிவிடலாம்.

2 அப்படியென்றால் நோய் முற்றி உயிருக்குப் போராடும் நோயாளி எழுதித்தரும் மாத்திரைச் சீட்டும் கவிதைகளா?

                           ஆமாஞ்சாமி. அது கவிதையேதான் அப்புறம் என்ன சும்மாவா. அட்ய்ஹு கவிததான். ஆனால் மருந்துகளுக்கிடையில் தனிமை வெறுமை கொலுசு, மழை என்ற நாலைந்து வரிகள் இருக்கவேண்டும். இருந்தால் சாகும்போதும் கவியெழுதிய கவிச்சித்தர் என அவருக்கு ஈமச்சடங்குகளைச் செய்து முடித்து விடலாம்.

3 கவிதை எழுத கவிஞரய்யாவுக்கு, அதன் இனந்தெரியாத மனவலி, பரபரப்பு, பிரஷர் குக்கர் கொதிநிலை, தடுமாற்றம், வருடங்களாகத் தடைபட்டிருந்த தருணம், குட்டிப் போட்ட பூனையாக அவஸ்தைப்பட்ட மனம் இதையெல்லாம் கவிதை எழுதுவதற்கு தேவையா?

                             ஆம். ஒரு கவிதை எழுதுவதும் பிள்ளை பெறுவதும் ஒன்றுதான் என கவிஞர்களே சொல்லுகிறார்கள், இத்தகைய அவஸ்தை வந்தால் ஏதேனும் ஒரு புத்தகத்தை…ஆனால் நீங்கள் பல்லாயிரக்கணக்காக வருடங்களாய் தேடும் ஒரு புத்தகமாய் இருந்தால் இன்னும் விரிவாக கவிதை வரும்..

ஒரு நபர், அவரைக் கவிஞரய்யா என்றே சொல்லலாம். அத்தைகைய ஒரு கவிஞரய்யா தனது நண்பரைத் தேடி ஒரு சிற்றூருக்கு வருகிறார். பேருந்து விரைந்துகொண்டிருக்கும்போது அவருக்கு இனம் புரிந்த ஒரு அவஸ்தை வருகிறது. பேருந்தோ மிக மெதுவாய் போய்க்கொண்டிருக்கிறது. கவிஞரய்யாவுக்கு உடல் சூடாகத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் எட்டிப் பிடித்தால் கொல்லன் காய்ச்சிய இரும்பைப் போல கொதிக்கத் தொடங்கிவிடும். சுற்றும் முற்றும் பார்க்கிறார். சிற்றூருக்கு செல்லும் ஒரே ஒரு பேருந்தாகையால் கூட்டம் நெட்டித் தள்ளுகிறது. ஒரு தொந்தி நிறைந்த வயிற்றுக்காரன் கவிஞரய்யாவின் தோளில் தனது எடையை இறக்குகிறான். ஏற்கனவே கூடியிருந்த அழுத்தம் இப்பொழுது கவிஞரய்யாவுக்கு இன்னும் கூடியது, இப்படியே இருந்தால் பிரளயம்தான் என நினைத்து அங்கும் இங்கும் பார்க்கிறார். தனது கவனத்தை பின்னோக்கிச் செலுத்துகிறார். தனது கவிதைத் தொகுதிக்கு வெளியூரில் மஞ்சள் சால்வை போர்த்தி கைதட்டிய நினைவுகள் வருகிறது. ஆனாலும் கவிஞரய்யா மனம் பதட்டத்துடன் நிகழ்காலத்திற்கு அவரை இழுத்து வருகிறது. மனம் தாளமுடியாத சுமையும் அழுத்தமும் அதிகமாகிப் போய்க்கொண்டேயிருக்க தாங்க முடியாத அவஸ்தையுடன் எழுந்து நிற்க, ஆள் எழுந்துவிட்டார் என அருகில் இருந்த முதியவர் அமர்ந்துவிட்டார். கவிஞரய்யாவோ அவஸ்தையை சற்று தள்ளிப் போடத்தான் எழுந்து நின்றார். ஆனாலும் பரவாயில்லை நிற்பது சற்று லகுவாக இருக்கிறது என நினைத்த அடுத்த விநாடியில் சகலமும் பறிபோகும் ஒரு மனநிலைக்கு கவிஞரய்யா வசமிழந்தார், கால்களை இறுக்கி கோணாலாக்கி எவ்வளவோ பொருத்தப்பாடுகளில் நின்று கொண்டிருக்க ஒரு வழியாக பேருந்து வேகத்தடையை தடையேதும் இல்லாமல் கடக்க தூக்கிப் போடப்பட்ட பேருந்துக்குள்ளிருந்த கவிஞரய்யாவுக்கு உள்ளே ஏதோ வெடித்துவிடுவதைப் போல அவஸ்தை கூடியபடியே வந்தது. வேகமாக பேருந்தை நிறுத்தச் சொல்ல நடத்துனர் இந்தா வந்துருச்சுங்க என்க கவிஞரய்யா கடுங்கோபத்தோடு அவரைப் பார்த்தார். இடை நிறுத்தம் வரவும் கவிஞரய்யா வேகமாக இறங்க நினைத்தும் அங்கேயும் போட்டி நிலவியதால் மனம் இன்னவெனத் தெரிந்த நடுக்கத்தில் அங்கும் இங்குமாக அலைக்கழித்து ஒரு வழியாக இறங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்த பால்ய நண்பன் நின்றுகொண்டிருந்தான். கவிஞரய்யா என ஆசை பொங்க நண்பர் அழைக்க  கவிஞரய்யாவோ எதுவும் பேசும் மனநிலையாது வா என கையைப் பிடித்துக்கொண்டு ஓடினார், அவரது மனம் இப்பொழுது கிட்டத்தட்ட பிரஷர் குக்கரைப் போலவே இருந்தது. விழுந்தடித்துக்கொண்டு வந்த கவிஞரய்யா வேகமாக கழிவறைக்குள் வந்தார். கதவு தாழிடுதல் கூட இரண்டு நிமிடங்கழித்தே நடந்தது. கொதி நிலை அவஸ்தை பிரஷர் குக்கர் எல்லாம் இலகுவாக இளகியது மனப்பதட்டம் தணிந்தது. கவிஞரய்யாவின் காகிதங்களில் ஈமுக்கோழிகள் இறக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தன. மிக மெதுவாக வெளியே வந்தார். கவிதை குறித்து சிந்தித்தார்.



Saturday, 6 October 2012

ஆத்மார்த்தி விமர்சனத்திற்கு முன் வைத்த கவிதை.





கற்பம் 
- ஆத்மார்த்தி

ஒரு பாடலின் இடையிசையாய் கழிந்துகொண்டிருக்கிறது காலம்.
.
முப்பத்து ஐந்தாவது வரி துவக்கத்தில்என் மடியில் தலைசாய்த்து மரித்துப்போனாள் வயலட் கலரிங் கூந்தல்காரி.
பாடலின் இரண்டாவது வரியிலேயே கள்ளப்பகிர்வுக்குப் பின் திரும்பிவந்தவள் ஏறெடுக்காமல் குளியலறைக்குப் போகிறாள்.
எட்டாவது வரியின் இரட்டிக்கிற வார்த்தைகளின் வழியாக கழுத்தைத் திருகிக் கொலை செய்த பாவத்தின் வீச்சம் வழிகிறது.
இருபத்து இரண்டாம் வரி ஒலித்து முடிக்கையில் உன் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
முதல் பல்லவி முடிந்து மீண்டும் முதல்வரி ஒலிக்கையில் உலகத்தின் ஒட்டுமொத்த வாதைக்குமான மருந்திடல் துவங்குகிறது.
சரணத்தின் மூன்றாம் வரியின் ஆறாவது வார்த்தை எல்லாக் கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பதாயிருக்கிறது.
சூன்யங்களின் பீடிக்கிற கரங்களனைத்தையும் வெட்டியெறிவதற்கான சூட்சுமம் எழுபதாவது வரியினுள் இருக்கிறது.
ஒப்புக்கொடுக்கிற தேவன்களின் மறைவிடங்களின் மீது ஒளி பாய்ச்சுவதாக எண்பத்தாறாம் வரி திகழ்கிறது.
எலும்புகளைப் பொசுக்கிக் கிடைக்கிற புகையெண்ணையின் மணத்தை தொண்ணூறாவது வரி கமழ்கிறது.
இரண்டாவது சரணத்தின் துவக்க வரியினுள் தேடல்களனைத்தும் முடித்துவைக்கப்படுகின்றன.
அதற்கடுத்த ஆயிரத்துப் பன்னிரண்டாவது வரியில் பூப்படைந்த பின்னரே உயிர்த்தல் நிகழ்கிறது.
சாவதற்குத் தயாரான கிழட்டுபொம்மைகளைக் கொன்றுவிளையாடும் பிள்ளையினங்களின் பேரொலி எட்டாயிரமாவது வரியில் வருகிறது.
பாக்கெட்டுக்களில் எல்லாவற்றையுமே காய்க்கிற ஒற்றை மரத்தில் அன்பின் பொட்டலங்களைச்சீந்துவாரில்லை என்ற குறிப்பு பதின்மூன்றாம்வரியில் தொனிக்கிறது.
மூன்றாவது சரணத்தின் ஒன்பதாவது வரியில் கடுக்கைக் கண்ணியனைத் தன் சடைபிரியொன்றில் தூக்கிலிட்டு நடனமாடுகிற குண்டலி எள்ளுகிறாள்.
நாப்பத்துமூன்றாயிரத்துப் பதினாறாவது வரியில் மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றன நீர்தளத்தில்.
பத்தொன்பதாவது வரியின் கடைசிக்கு முந்தைய சொல்லில் அணைந்துகொண்டிருக்கிறது வானம்.
பூச்சியம் தவிர வேறொன்றுமில்லை.




அய்யா இவ்வரிகளில்  உங்களுக்கு என்னென்ன வார்த்தைகள்  எல்லாம் தெரிந்திருக்கிறது  என பட்டியலிட்டிருக்கிறீர்கள். இந்த பட்டியலிடும் அறிவு முதலில் கவிதைக்கு சற்று தொலைவாக இருக்கவேண்டும். கவிதையில் நிகழும் கவிஞனின் பலகுரல் தன்மையானது கவிதையை மேலோட்டமாக வாசிப்பவனுக்கு வேலையை அதிகமாக்குகிறது. அந்த பலகுரல் தன்மையை ஒரு உடனடி உண்பொருளாக வேலைத்திட்டமாக பயன்படுத்தமுடியாது. குறைந்தபட்சம் அதைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டுமானால் அதன் பல குரல் தன்மையை அடையாளம் கண்டு அர்த்தங்களை தயார்செய்யவேண்டும். அதைப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய புதிய பிரதியாக வாசிப்பவன் மாற்ற வேண்டும். இங்கு மேற்குறிப்பிட்டதில் இரண்டுமே நிகழாததோடு வெறும் வார்த்தைக்குவியலாய் தலை குப்புற நின்றுகொண்டிருக்கிறது.  இவ்வெறும் வார்த்தைக்குவியல்களை வைத்தும் அதன் வடிவத்தை வைத்தும் நாம் இதைக் கவிதையென்று சொல்ல முடியாது.


கவிதைக்கே உரிய சொற்கள் சில இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒரு வாசகாரக நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். ஆனால் எழுதும்போது அச்சொற்களை நீங்களே ஏதோ கண்டுபிடித்த விஞ்ஞானி போல் யுரேகா என்று குதித்து விடுகிறீர்கள். அய்யா பிரதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும். அதாவது நீங்கள் எப்போதும் முதல் வரியின் முதல் வார்த்தையிலிருந்து மட்டும் தொடங்குவதில்லை. இறுதியோ...இல்லை நடுவரியிலிருந்தோ கவிதை உருவாகலாம்.

ஆனால் நீங்கள் வார்த்தைகளை இடைவெளியில் கொன்று விடுகிறீர்கள். ஒன்று கவிதை எழுதுகிறபோதே அதை ஒரு வாசகனாக நீங்கள் இவ்வகைக் கவிதைகள் எவ்வகை வாசகனுக்கானது என்ற குறிப்பை உங்களது மனம் உணர்த்ததினாலும், அறிவகந்தை உங்களை ஒரு கவிஞர் என்று நம்ப வைத்து மேலும் சில வரிகளை எழுத வைத்துவிடும். ஒரு இடத்தில் கவிஞராக இருக்க வேண்டும் அதே சமயம் கவிதை எல்லோரிடமும் போய்ச் சேரவேண்டும், அது மட்டுமல்லாது வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாயிருக்கிறது.

இந்த பெருந்தவிப்பே சொற்களை குறுக்கும் மறுக்குமாக உடைத்து இன்னும் ரகசியத்தைப் பேசும் ஒரு மொழிபோல் உங்களை செயல்படுத்தியிருக்கிறது. வாசகர்களை ஏமாற்ற நாம் நமக்குத் தெரிந்த பட்டியல்களை இடுவது ஒரு ஜிக் ஜாக் வேலையாகும். ஆனால் ஒரு விமர்சகன் தனது வாசிப்பின் மூலம் உடைப்பது முதலில் இந்த ஜிக்ஜாக்கைத்தான். அதனால்தால் கவிதை காலியாகவும் செய்கிறது.

கவிதையின் நவீன வடிவம் இதுவாகத்தானிருக்கும் என நீங்கள் நம்பிய வடிவத்தை உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளை வைத்து விளையாண்டிருக்கிறீர்கள். ஒரு குழந்தை அழுவதை ரசிக்க முடியும். அதற்காக அழவைத்து வேடிக்கை பார்க்கக் கூடாது. நீங்கள் உங்கள் வரிகளை வைத்து வேடிக்கை காட்டுகிறீர்கள். வேடிக்கை காட்டுவதை நம் ஊரில் வித்தை காட்டுவதாகத்தான் சொல்லுவார்கள். நீங்கள் காட்டும் இந்த வேடிக்கை வெகுவாக பல தமிழ் கவிகள் காட்டுவதுதான்.

ஆனால் அதில் பெரும்பாலோர் வேடிக்கை காட்டி யாசகம் கேட்டு அலுமினிய வார்த்தைகளை நீட்டுவார்கள். ஆனால் நீங்கள் உழைக்கிறீர்கள், கவிதைக்காக அதன் மொழிக்காக வார்த்தைகள் கைவரப்பெற நீங்கள் உழைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ச்சியாக உழையுங்கள். பலன் உண்டு. மேலே நீங்கள் எழுதியதை கவிதை என்று தயவுசெய்து நம்பாதீர்கள், அது நீங்கள் உழைக்க வேண்டிய பொழுதுகளைத் தின்று மென்று துப்பிவிடும். நவீனத்துவத்தோடு இணையாததனைத்தும் கொல்லப்படுகிறது. ஆனால் அவை தற்கொலைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன.கவிஞனின் தன்னிலை  ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல...அதுவும் எல்லா மனிதர்களைப் போலவே அவனும் முரண்பாடுகளின் ஒட்டுமொத்தக் கூறுகளைக் கொண்டவனே.அது குறித்து நாம் நீங்கள் அனுப்பிய இரண்டாவது கவிதையில் பேசுவோம்.


ஓவியத்தில் தெறிந்த 
இந்திரியம்
நீந்தும்
குழந்தைகள்
பெயரற்ற தேசம்
பீங்கான்
கருவரை
கற்பம்
தரி
சிதை
பெயரழித்தல் ஒரு வகைச் சமன்பாடு.

- தீர்த்தமுனி


Friday, 5 October 2012

கடற்கன்னி.






அந்த எல்லா மனிதரும் உள்ளேயிருந்தனர்
நிர்வாணமாக அவள் நுழைந்த போது
அவர்கள் குடித்துக்கொண்டேயிருந்தனர்
அவள் மீதி காறித்துப்ப ஆரம்பித்தனர்
அண்மையில் நதியில் இருந்து வந்த அவள்
ஒன்றையும் புரிந்துகொள்ளவில்லை
வழியைத் தொலைத்துவிட்ட அவள் ஒரு கடல்கன்னி
அவளின் பளபளக்கும் தசையில் வசவுகள் வழிந்தோடியது
அவள் பொன்னிற மார்பினை, கீழ்மை நனைத்தது
அவள் அழவில்லை, கண்ணீர் துளிகளுக்குப் புதியவளானதால்
அவள் அணிந்திருக்கவில்லை ஆடைகளுக்கு அந்நியமானவளானதால்
சிகரெட் நுனிகளாலும் எரிந்த தக்கைகளினாலும் அவர்கள்
அவளுக்குத் தழும்பேற்றினார்கள்
சிரிப்புடன் அருந்தகத்தின் தரையில் அவளை உருட்டினார்கள்
அவள் பேசவில்லை பேச்சென்பதை அவள் அறியாததால்
அவள் விழிகள் தொலைதூரத்து அன்பின் நிறமாக்
அவள் புஜங்கள் புஷ்பராகத்திற்கு ஒத்திருந்தன
பவழஒளியில் அவள் உதடுகள் அசைந்தன சப்தமின்றி
அவள் வெளியேறினாள்
கடைசியில்
அந்தக் கதவு வழியாக
நதியைச் சென்றடையுமுன்னரே
அவள் தூய்மையாகிவிட்டாள்
மழியில் நனைந்த  வெள்ளைக் கல் போல
மீண்டுமொருமுறை
மின்ன
நீந்தினால் மற்றுமொருமுறை திரும்பிப்பாராமல்
சூன்யத்திற்குள்
அவளுடைய மரித்தலுக்கு நீந்தினாள்.




கவிதை கேட்டவர்களுக்காக...
முக்கியமாகஆத்மார்த்தியின் அடிப்பொடிகளான மாட்டுப்புத்திரர், நாட்டாண்மைக்காக.

Tuesday, 2 October 2012

அன்பான வாசகருக்கு...




கவிதை தன்னளவிலேயே எளிமையானது. எளிமை என்ற பதம் கூட சற்று மிகையுணர்ச்சிகொண்டதாக அமையும். அந்தளவுக்கும் கீழான எளிமையே கவிதை. அதன் இயல்பே அதுதான். அதனால்தான் அது வசீகரிக்கிறது. கவிதையுலகம் மிக நேரடியாக வாசகரைச் சார்ந்திருந்தாலும் அது தன்னளவில் தனித்தே இருக்கிறது, கவிதை அழகானதும் கூட, அது திட்டமிட்டு ஒப்பனைகளால் ஆன அழகல்ல். அதற்கேயுரிய அழகு. கிராமத்தில் முள்ளோடு விளையும் கற்றாழைப்பழத்தையொத்த, அதற்கு நிகரான ரோஜாவையொத்த அழகும் கூட. நமது வியாக்கியானப் புலிகளின் ஸ்டாண்டில் தொங்கும் விளக்கப்பட்டு ஜொலிக்கும் அழகை எடுத்து எதன் மீது போட்டாலும் அது வக்கிரத்தை அளவுக்கதிகமாக் கூட்டித் தருகிறது.

கவிதைகளை வார்த்தைப் போர்வைகளால் மூடுபவர்கள் அதன் எளிமையை மூச்சுத் திணற வைத்துக் கொன்றே விடுகிறார்கள். வெளிப்படுத்துகிறேன் என்பவர்களோ வெட்டவெளியில் பொசுக்கிக் கொல்கிறார்கள். ஆனால் கவிதை அவர்களின் அகத்தாக்கத்துக்குள் எவ்விதம் மாற்றமும் அடையாமல் அப்படியே ஒரு பாறையாய் கனத்துக்கொண்டிருக்கிறது. கவிதையை அணுகுபவர்களுக்கு கல்வியில்லையேல் அவர்களை இலக்கணம் தலைகுப்புற அவர்களை தள்ளி விடும், ஆனால் கவிதை இலக்கணத்தில் அமைவதல்ல. இதுவே கவிதையின் முதல் விதி.

பெரும்பாலும் ஜப்பானிய ஹைக் – கூக்கள் இலக்கணத்தை அகற்றிவிட்டு அங்கு எளிமையைக் கொண்டு வந்துவிடுகிறது. அதனால்தான் அது கவிதையாக மாறுகிறது. கவிதையை விளக்க கவிதையை எழுதிக்கொண்டிருக்கமுடியாது என்பதுதான் அடிப்படை. ஆனால் கவிதைக்கு தொடங்கு களம் நிகழ்த்துகளம் எதுவுமேயில்லை.
என் அம்மா நீண்ட நெடுங்காலமாக உழைக்கிறாள் ஒரு பிடிச் சோற்றுக்காக…அவளது உள்ளங்கையில் குவிந்திருக்கும் சோற்று ருசியில்தான் கடவுளும் சம்மணமிட்டு தனக்காக பருகையை பெற்றுக்கொள்கிறார். இவ்வகையிலான எளிய வரிகளின் மூலம் அது உணர்த்தும் பொருளின் மூலம் கவிதையின் சிறு நடைபயிற்சியைக் காணலாம்…

எனக்கொரு கனவு இருக்கிறது என லூதர் சொன்னதை இதன் கீழ் பொருத்திப் பார்க்கலாம். அந்த வரிகளை நாம் எத்தனையோ முறை எத்தனையோ இடங்களில் சொல்லியிருக்கலாம், ஆனால் அவ்வரிகளைச் சொல்ல லூதர் வாழ வேண்டியிருந்தது, அந்த வரிகளுக்காக தன் வாழ்க்கையை  ஒப்புக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைய அரசியல்வாதிகள் மேடையில் ஆற்றுவது பெரும்பாலும் கவிதைதான். எந்தளவுக்கு கவிதையை நாம் தாங்கி, தோள்கள் வலிக்கத் தூக்கிப் பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு தன் உடலை கீழே இறக்கிக் கொள்ளுகிறது. கவிதை எழுதுகிறவர்கள் தங்களது வாழ்க்கையை கவிதைக்கு ஒப்புக்கொடுப்பதில்லை. ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை ஆனால் சற்று பணிய வேண்டும். ஆயுதத்தைப் பயிற்சி இல்லாது ஆயுதத்தை எங்கனம் கையாள முடியும். இங்கோ சிறுகுழந்தைகள் காலகட்டி அட்டைக்கத்திகளை வைத்துக்கொண்டு யுத்தங்களுக்கு வருகின்றன. கவிஞன் அவர்களைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு உன்னை போல் ஒரு வீரன் இல்லையே குழந்தை என இறக்கிவிட்டுச் செல்வான். ஆம் நண்பர்களே ….


கிரேக்க ஞானிகளில் ஒருவரான ஜெனஸை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எந்த அளவுக்கு இலகுவானவரோ அந்தளவுக்கு எளிமையான குணங்களை உடையவர். மிக முக்கியமாய் கவிஞர்.  ஒரு கவிஞன் தன் வாழ்நாளை கவிதையிடம் ஒப்படைப்பதென்பது எவ்வளவு வசீகரமானது. அது உண்மையில் பேருவகையும் கூட. ஜெனஸ் கவிதைகளிடம் பற்றுக்கொண்டதனால் அதன் எளிமை அவரை எதிலும் பற்றுக்கொள்ளவிடாமல் ஆக்கியது. அதனாலேயே அவர் ஞானியென்றழைக்கப்பட்ட கவிஞரானார். ஆனால் ஜெனஸோ ஞானியை உதறிவிட்டு கவிதையை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டார், ஏனென்றால் ஞானத்திற்கு கவிதையிடம் இருக்கும் அறுவெறுப்பை கவிதையால் அறிந்தவர் அவர்.

எதன் மீதாவது பற்று வைக்கும் போது அது அசிங்கத்தை உன் மீது பூசி விடுகிறது. ஒரு பொருளைப்போல கையில் இறுக்கமாகப் பிடிக்க ஒத்துப் போக வேண்டியிருக்கிறது. அதனால்தான் உன்னதத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு எளிமையைக் கையில் வைத்துக்கொண்டார். எளிமையோடு இருப்பதென்பது ஆளுமைகளுக்கு சாபம் அல்லவா. அரசு அவரது எளிமை எல்லோரையும் பற்றிப் பீடிக்கும் நோய் எனத் தெரிந்து அவரைக் கைது செய்ய யோசனை செய்துகொண்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவர் அடிமை வியாபாரிகள் அவரை விலைக்கு விற்க நினைத்தனர். அவரைப் பிடிப்பது மிகக்கடினம் என வியாபாரிகளுக்குத் தெரியும். ஜெனஸ் கிட்டத்தட்ட டார்ஜானைப் போல இருப்பார். ஒரே நேரத்தில் எட்டு பேரை தூக்கியடிக்கும் எளிமையும் வலிமையும் அவருடையது. பிடிக்க வந்தவர்களோ நான்கு பேர்கள். அவரைப் பிடிப்பது சிரமம் என உணர்ந்த போது அவரைச் சூழ்ந்து கொண்டனர்.


ஜெனஸ் சொன்னார் பயப்படாதீர்கள் குழந்தைகளே நான் உங்களுடனேயே இருப்பவன். என்ன விசயம் சொல்லுங்கள், எதுவும் பிரச்சினை இருந்தாலும் சொல்லுங்கள் தீர்த்து வைக்கிறேன் என்றார். அவர்கள் இந்தப் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைக்க விரும்ப மாட்டீர்கள் என்றார்கள். அவரோ நான் தீர்த்து வைக்காத பிரச்சினைகள் இருந்தால் அது எனக்கு சவால்தான் பரவாயில்லை சொல்லுங்கள் என்றார். அவர்கள் இதுதான் எங்கள் எண்ணம் உங்களை பிடித்துக்கொண்டு போய் விற்கவேண்டும் என்றார்கள். அவர் சரிதான் பிறகு எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? யாருக்காக? இதோ என் கைகள் ஆரம்பியுங்கள் என்றார்.

அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இதில் என்னவோ இருக்கிறது எனச் சந்தேகப்பட்டார்கள். இப்படி விட்டுக்கொடுக்கிறாரே! அவர் சொன்னார் கவலையே வேண்டாம் நான் சண்டையே போடமாட்டேன். நான் அப்படியே மிதந்து போகிறவன் அதுதான் என் வாழ்வின் போக்கே. எனவே நீங்கள் என்னைப் பிடித்துக்கொண்டு போகலாம் என்னை சிறை பிடித்துக்கொள்லலாம். முழுமைக்கு அதுதான் வேண்டுமென்றால் நடக்கட்டும் என்றார் ஜெனஸ். அவர்களுக்கோ மறுபடியும் பயம். என்றாலும் முயன்றார்கள். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது. அவர் சண்டை போடப் போவதில்லை.

விலங்கிட்டார்கள். அவர்களோடு அவர் போனார். ஆனால் அப்படிப்பட்ட மனிதரை யாரும் அடிமையாக்கிக்கொள்ள முடியாது. அவரோடு நடந்து போனபோது அந்த நான்கு பேரும் முட்டாள்களாகத் தெரிந்தார்கள். ஜெனஸ் சொன்னார். பயமே வேண்டாம். அந்த சங்கிலிகளெல்லாம் வேண்டியதே இல்லை. நான் எப்போதும் உங்களோடு வருகிறேன். உங்களை விலகிப் போகவே மாட்டேன். அவர்களுக்கு பயமோ கூடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன ஆள் இவன் எப்படிப்பட்டவன்?

ஆனால் அவர் சொன்னதையெல்லாம் கேட்டு நடந்து கொண்டார்கள். உயர்ந்தவர் உயர்ந்தவர்தானே. சிறையில் கூட தலைவன் தலைவனாகவே இருக்கிறான். போகப் போக அவர்கள் தன் பிரச்சினையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்தான் அவ்வளவு மகிழ்ச்சியான ஆளாயிற்ரே. வெகு பரவசமாக இருந்தார். இந்த உலகத்தைச் சேர்ந்தவரைப் போலவே இல்லை.

சீக்கிரத்தில் தோழர்களாகிப் போனார்கள். தோழர்கள் மட்டுமல்ல சீடர்களாகிப் போனார்கள். ஜெனஸை விற்க சந்தைக்குப் போய்ச் சேரும்போது அவர்கள் அவரது சீட்ர்களாகவே ஆகிவிட்டார்கள்னார்கள். இவர் குருவாகிப் போனார். குருவே இதைச் சொல்லுங்கள் …குருவே அதைச் சொல்லுங்கள்…குருவே இதென்ன அதென்ன என்றார்கள். அவரோ என்னை விற்பதற்கு வந்திருக்கிறீர்கள். அதை மறந்து போகாதீர்கள், உங்களது உணர்வு மங்கிப் போனதா என்ன? மறக்காதீர்கள், எதற்கு என்னைப் பிடித்து வந்தீருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள் என்றார். அவர்கள் அதை நாங்கள் இபோது செய்யமுடியாது, ஆனால் அவரோ கலவலையே படாதீர்கள் உங்களுடைய திட்டத்தைக் கைவிடாதீர்கள். உங்களுக்காக நான் இதைச் செய்கிறேன். அவர்களால் நம்பவே முடியவில்லை. என்ன செய்யப் போகிறார்?

பிறகு அவர்கள் சந்தை மேடைக்கு வந்து சேர்ந்தார்கள். எல்லோருக்கும் அவரைப் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது. சந்தை முழுக்க அந்த அடிமை மீது ஆர்வம் கொண்டுவிட்டது. ஏனென்றால் இதற்கு முன் அவ்வளவு அருமையான அடிமையை அந்த சந்தை பார்த்ததேயில்லை.
ஏலம் கூறுகிறவன் வந்தான். ஜெனஸ் வந்து நிற்க அவன் ஜெலஸை ஏலத்தில் விட அவரை வர்ணித்தான். இவன் அருமையானவன், ஆரோக்கியமானவன் பலமிக்கவன், ஜெனஸ் குறுக்கிட்டார் ‘நிறுத்து. நான் அங்கே வருகிறேன். எப்படி ஒருவனை அறிமுகப்படுத்தி விற்பதென்று உனக்குத் தெரியவில்லை. ஏலம் கூறுகிறவன் கீழே இறங்கினான் அவர்தான் பலசாலியாகவும் அதிகாரத்தோடும் இருந்தாரே? ஜெனஸ் மேடையேறினார். எந்த அடிமைச் சந்தையிலும் நடக்காதது நடந்தது. ஜெனஸ் கூறினார். “அடிமைகள் எல்லோரும் இங்கே வாருங்கள், எஜமானன் ஒருவன் விற்கப்படுவதற்காக இங்கே வந்திருக்கிறான்….”

இங்குதான் கவிதை தொடங்குகிறது. அத்தனை எளிமையாக அத்தனை இலகுவாக.

பறக்கும் போது பறவை 
சிறகைப் பற்றிக்
கர்வம் கொள்ளுவதில்லை. 
அது 
பறந்து கொண்டிருக்கிறது....

Monday, 1 October 2012

வா.மணிகண்டன் கவிதையை முன்வைத்து.....





டைனோசர்களுடன் வாழ்பவன்


டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை
தெருவோரம் கிடந்த டைனோசர் குட்டியை
முதன் முதலாக
அவர் எடுத்து வந்தபோது
அருகாமையில் எதிர்த்தார்கள்
அக்குட்டி வளர்கையில்
இரத்த கவிச்சை வீச குறையத் துவங்கியது
எதிர்த்தவர்களின் எண்ணிக்கை
இப்பொழுது நிறைய டைனோசர்களை வளர்க்கிறார்
அவைகளுக்கென வீடுகளை
வாடகைக்கு பிடிக்கிறார். வீடு தராதவர்களை
அவைகளுக்கு உணவாக்கி விடுவதாக மிரட்டுவதும் உண்டு
அதன்பிறகாக வாடகை தருவதில்லை
டைனோசர்கள் அவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவதை
அவரின் பாதத்தை தம் சொர சொர நாவினால் தடவுவது உட்பட-
ஜன்னலில் ஒளிந்து பார்த்திருக்கிறேன்
சமீபமாக
வீடுகளுக்கு அதிக சேதாரமில்லாமல்
அவை
அடங்கி வாழக் கற்றுக் கொண்டதாக டீக்கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார்
’டைனோசர்களுடன் வாழ்வது எப்படி’ என்ற புத்தகம் வாசிப்பதை
தினசரி வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு
டைனோசர்களின் அருகில்
அவன்
என் குழந்தையயை தூக்கிச் சென்றதாக கேள்விப்பட்ட
வெள்ளிக்கிழமையிலிருந்து
விரல்கள் சில்லிட்டுக் கிடக்கின்றன
எதிர்க்கவே முடியாத மனிதனிடம்
மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை
கூகிளில் தேடி
இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன
இதுவரை கடுமை காட்டப்படாத குழந்தையிடம்
இனி அவனிடம் போகக்கூடாது என மிரட்டிய கணம்
அதன் பற்கள் சிமிட்டியதை பார்த்தேன்.

வா.மணிகண்டன்



கவிஞனின் விருப்பமே குறிப்பிட்ட நேரம் வரை குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்துகிறது. அந்த விருப்பம் அவனைக் கட்டுப்படுத்தாதபோது மற்ற கருத்துக்கள் அவனைத் திசை திருப்பி எடுத்த பணியை வேறு திசைக்கு அனுப்பிவிடுகின்றன. கவிஞனின் கலையறிவுக்கு முன்னோடியாக அவனுடைய விருப்பமே முந்திக்கொள்கிறது. இந்த விருப்பமும் தன்னிச்சையாக செயல்படுவதில்லை. இதுவும் மனத் தெளிவையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒரு மரக்கட்டையும், உணர்விழந்த மனிதனும் எதன் மீதும் விருப்பம் கொள்ளமுடியாது. எனவே மனத் தெளிவிருந்தால் தான் விருப்பம் தோன்றமுடியும். மனத்தெளிவு என்பது நான் இருக்கிறேன் என்னும் இருத்தலைவிட்டுப் பிரியாமல் இரண்டறக் கலந்திருப்பது.

இச்செயல்பாடு மேற்கண்ட கவிதையில் எங்குமே செயல்படவில்லை. செயல்பட்டதெல்லாம் அவரது சொந்தமான வாசிப்பு அவரை வாசக நிலையிருந்து எழுத்தாளன் என்ற நிலைக்குக் கூட்டிச் சென்ற நோக்கமே படைப்பின் அளவுகடந்த உன்னத நிலைக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட கவிதையை இன்னொரு பாதிப்பாய் வெளியிட வைத்திருக்கிறது. எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிகாந்த் போல் முடி வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் முன் மண்டையை வழித்துக்கொள்வது போல. இங்கு நோக்கம் ரஜினிகாந்தின் பிம்பமாய் தன்னை ஒற்றியெடுப்பதே. ஆனால் கவிஞருக்கு வார்த்தைகள் ஒத்துழைக்கின்றன.

ஒரு கவிதை தீட்டுவதற்காக எழுத்தாணியில் மை நிரப்பி அல்லது கணிப்பொரியின் விசைப்பலைகையில் கண்வைத்து அவன் விரல்களைக் கொண்டு செல்லும்போது அவன் கவிதை எழுதப்போகிறான் என ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். ஆனால் கவிதை எழுதாமல் விரல்களை இழுத்துக்கொள்கிறான். திடுமென நிறுத்தியவன் சிந்திக்கிறான். பிறகு பேனாவை, அல்லது விசைப்பலகையை விட்டு எழுகிறான். அவனைத் தடுத்து நிறுத்தியது எது? மனக்கண்ணால் எந்தக் கவிதையை எழுத நினைத்தானோ அந்தக் கவிதையின் கருத்து அல்லது காட்சி அவனைக் கட்டுப்படுத்துவற்காக குறிப்பிட்ட பழைய கருத்து அவன் உள்ளத்தில் ஏன் தோன்றுகிறது. கவிஞனுக்கு என்று  தனித்துள்ள விருப்பமே அவ்வாறு அவனைத் தூண்டுகிறது.

இக்கவிதை புழங்கு தளம் ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு பழக்கப்பட்டது. இக்கவிதையில் கவிஞரய்யா உருவாகிய வார்த்தைகளை கண்டால் நவீன வாசகருக்கு…( நவீன கவிஞர் என்றால் நவீன வாசகரும் இருக்க வேண்டுமல்லவா) கவிஞரய்யா ஏதோ ஒரு புதிரைச் சுட்டுகிறார் எனத் தோன்றும். பழக்கப்பட்ட சொற்களாகத்தான் எல்லாம் இருக்கின்றன. கவிதையில் டைனோசரை நுழைத்ததும் அது நவீன வடிவத்தை எடுத்திருக்கிறது. உதாரணமாக, பார்வையில் இதை வைத்துப் பார்க்கலாம். முதலில் நவீன வாசகன் செய்ய வேண்டியது சிறிய பெயர் மாற்றம் டைனோசருக்குப் பதில் இதில் குருவி என்றிருந்தால் வளர்க்கும் வீட்டுக்காரரின் கண்களில் அலகுகள் தெரிந்திருக்கும், கழுதை என்றால் அதை வளர்க்கும் வீட்டுக்காரரின் கண்களில் கால்கல் தெரிந்திருக்கும். இப்படி ஏதேனும் ஒன்றை வகைக்கப்படுத்தலாம். வகைப்படுத்துவதற்கு முன்பு இதே கவிதையை மிகச் சிறப்பாக கையாண்டவர் கவிஞர் சங்கர் ராமசுப்பிரமணியன் அய்யா அவர்கள். சிங்கத்துக்குப் பல்துலக்குவது எப்படி என்ற அவரது கவிதை தீராநதியில் வெளி வந்தபோது அதன் பார்வையாளர்கள் சிங்கத்துக்கு பதில் துலக்குவது எப்படி என்ற கேள்வி நிறைய பேரைப் பாதித்த ஒன்று. மிக முக்கியமாக அக்கவிதை வெளிப்படுத்திய தன்னளவிலான அரசியல், சுய பச்சாதபம்.

அக்கவிதையை முழுவதும் அடியொற்றி, அக்கவிதை வீச்சால் தாக்கப்பட்டு இக்கவிதை வரிகளை சமைத்திருக்கிறார் மணிகண்டன். ஏற்கனவே சிங்கத்திற்கு பல் துலக்குவது படித்து அலுப்புற்ற பழைய வாசகருக்கு இக்கவிதா அனுபவம், புதிய மொந்தை பழைய கள் என்றே சொல்லத் தூண்டும். வார்த்தைகளைக் கவனித்து, இடைவெளிகளைப் பார்த்து பழகி வந்த நவீன வாசகருக்கு கவிஞர் ஏதோ ஒரு பூச்சாண்டியப் பார்த்து பயந்திருக்கிறார் என்று மட்டும் தோணலாம். வாசகரை வெறும் வார்த்தைகளின் மூலம் எடை போடும் கவிஞரய்யா கண்களில் எழுத்துக்கள் தெரிவதை நாம் பார்க்கலாம்.

(கவிதை என்று சொல்லப்பட்ட மேற்கண்டதில் இடையிடையே வரும் டீக்கடை, கூகுள். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வசன உத்திகளேயன்றி வேறில்லை. கண்களில் பற்கள் முளைத்தன என்ற பதங்கள் எல்லாம் சாதாரண படிமங்களாகக் கூடத் தேறாமல் இருக்கிறது.)


இக்கவிதையில் நாம் பாராட்டும் அம்சம் மூலத்தின் உத்திகளை போலி செய்வதற்கென இவ்வார்த்தைகள் உண்டாகியிருந்தாலும். அது நம்மிடையே செயல்படும்போது நமக்குரிய வரிகளாக மாறும்போதுதான்.  இதனிடையே நாம் காணும் இன்னொன்று கவிதைச் செயல்பாட்டில் திடீரென கதை சொல்லும் நிலைக்கு கவிஞர்கள் சென்றுவிடுவதுதான். அது மூலத்திலிருந்தே வந்த நினைவுதான்.

டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை

இவ்வரிகள் கவிஞரய்யாவின் பாதிப்புகளை வலுவாக நங்கூரமிட்டாலும் அடுத்து அவர் செய்வது கதை செய்யும் கருத்தைத்தான், அது தான் ஏதோ மிக முக்கியமான ஒன்ரை எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற தோற்றப்பிழையை உருவாக்கிவிட்டது. விளைவு கதையாகி பழைய கவிதையை இன்னும் சிராய்க்கிறது. இக்கவிதையோடு உலகப்புகழ்பெற்ற மூக்கு – பஷீரையும் ஞாபகத்தில் கொள்ளலாம். இந்த கவிதையை மட்டும் மூலமாக வைத்து மணிகண்டன் அய்யாவின் கவியுலகை எடைபோடக்கூடாது. இன்னும் விரிவாக நாம் பேசலாம்


விமர்சனங்களை வாசகர்கள் சுட்டலாம்.