மீனுக்குள் கடல்
என் மனக் குரங்குக்கு
உடைகள் தைத்தே கை சலித்தோய்ந்தது
என் யாக்கையின் காலம்
நேற்றிரவு வரை
மடங்காக்கத்தி
குரங்கின் கையில்
ஆப்பிள் நறுக்க என்றோ ஒரு
ஆதாம் கொடுத்தது
மீனுக்குள் கடலில் அலை ஓய்ந்த மோன இரவு
ஏதோ ஒரு விதமாய் ஒரு அசதியில்
கத்தி கைநழுவ குரங்கது
மெய் புதைந்து தூங்குகிறது
ஒரு விழிப்பின் தருணம் திடுமென
குரங்கின் கனவில் புகுந்துவிட நான்
கண்டேன் ஒருத்தியை
திரை இன்றி
இலை தழை கூட மேலின்றி நிறை
நிர்வாணத்தில் ஒளிரக்கண்டேன்
அவளே என் அம்மாவும் அவளே என்
தங்கையும் அவளே என் மனைவியும் அவளே
என் குழந்தையும் அவளே.....
பெயர்
கடவுள் பெயரோ இயற்கை பெயரோ
சூரியன் பெயரோ சந்திரன் பெயரோ
சனியின் பெயரோ மலையின் பெயரோ
மரத்தின் பெயரோ தலைவர் பெயரோ
தாத்தாவின் பெயரோ ராக்கெட்டின் பெயரோ
செல்லப் பிராணியின் பெயரோ
சர்க்கஸ் கோமாளியின் பெயரோ
ஆணின் பெயரோ பெண்ணின் பெயரோ
போல் ஏதுமில்லை
என்னை நானே கூப்பிட்டுக்கொள்ளும் ஒரு பெயர்
ரகசியமில்லை அது-
ஒரு பிச்சைக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு விபச்சாரி என்னைக் கூப்பிடும்போது
ஒரு பைத்தியக்காரன் என்னைக் கூப்பிடும்போது
ஒரு குஷ்ட ரோகி என்னைக் கூப்பிடும்போது
ஒரு அனாதை என்னைக் கூப்பிடும் போது
என்னை நான் கூப்பிடும்போது…..
No comments:
Post a Comment